என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, November 18, 2011

பெரம்பூர் ராஜா

வட சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் இன்று எப்படி இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்த காட்டுப் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு ஊராகிவிட்டது.

1752ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' என்ற சமஸ்கிருத நூலில் பெரம்பூர் பற்றிய சுவாரஸ்யமான ஒரு செய்தி இருக்கிறது. அதாவது அந்தக் காலத்தில் கருவேந்தன் என்ற ஒருத்தர் அயனாவரத்தில் வசித்து வந்தார். சிறந்த கலா ரசிகனான கருவேந்தன் அவரைத் தேடி வரும் கலைஞர்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து கவுரவிப்பாராம். அதேபோல ஒருமுறை கொல்கொண்டாவில் இருந்து வந்திருந்த சில கவிஞர்களுக்கு கருவேந்தன் அள்ளிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர்கள் நாடு திரும்பியதும் இவரைப் பற்றி தங்கள் அரசரிடம் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் போற்றும் அந்த கலா ரசிகனை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் கோல்கொண்டா அரசர் மகரங்கா. அரசரைப் பார்க்கப் போன இடத்தில் கருவேந்தனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். கருவேந்தனைப் பிடித்துப் போன மகரங்கா அவருக்கு பரிசாக வெட்ரபுரா என்ற இடத்தைக் கொடுத்தார். அதுதாங்க நம்ம பெரம்பூர். அதாவது வெட்ர என்றால் பிரம்பு என்று அர்த்தம். வெட்ரபுரா என்றால் பிரம்புகள் நிறைந்த ஊர் என்று பொருள். அப்படித்தான் பெரம்பூரைப் பெற்றுத் திரும்பினார் கருவேந்தன். ராஜா ஆனதும் அவர் அயனாவரத்தில் இருந்து பெரம்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார்.

அதெல்லாம் சரி, இந்த கருவேந்தனுக்கும் 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' நூலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி. இரண்டுக்கும் பல தலைமுறை சம்பந்தம் இருக்கிறது. அதாவது இந்த நூலின் கதாநாயகன் ஆனந்தரங்கப் பிள்ளை. இந்த அனந்தரங்கப் பிள்ளை யார் தெரியுமா? பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்ஸின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இவர் 1736 முதல் 1760 வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தான் பார்த்த கேட்டவற்றை நாட்குறிப்பு போல எழுதி வைத்தார்! அந்த காலகட்டத்தை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் பெருமளவில் உதவுகின்றன.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ஆனந்தரங்கத்தின் கொள்ளு கொள்ளுத் தாத்தாதான் நம்ம கருவேந்தன். இதற்கும் ஆதாரம் இருக்கிறது. கருவேந்தன் பெரம்பூருக்கு வீடு மாறியதும், அவருக்கு சோலை, வடமலை, திருமலை என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் சோலையின் மகன் பொம்மைய்யா. அந்த பொம்மைய்யாவிற்கு பெத்த பொம்மா, சின்ன பொம்மா என இரட்டைக் குழந்தைகள். இதில் சின்ன பொம்மாவிற்கு 6 மகன்கள். அதில் மூத்த மகனான பொம்மையாவிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இரண்டாவது மகன் பேர் திருவேங்கடம். இவர்தான் நம்ம ஆனந்தரங்கத்தின் அப்பா. அப்பாடா... ஒருவழியா சொல்லி முடிச்சாச்சு.

இந்த திருவேங்கடத்திற்கு பிரெஞ்சு, ஆங்கிலம், டச்சு, போர்த்துகீஸ் என பல ஐரோப்பிய மொழிகள் தெரியுமாம். திறமைசாலியாக மட்டுமில்லாமல் பெரிய மனசுக்காரராகவும் இருந்திருக்கிறார் திருவேங்கடம். பெரம்பூரில் அவர் கட்டிய சத்திரமும், அருகிலேயே ஏழைப் பிரமாணர்களுக்காக அவர் உருவாக்கிய சிறிய கிராமமும் இதற்கு ஆதாரமாக விளங்கின.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் காலூன்றி அதனை விஸ்தரித்துக் கொண்டிருந்தபோது, பெரம்பூர் ஆர்காடு நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதைய நவாப்பாக இருந்த முகம்மது சையத், 1742ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஐந்து கிராமங்களை வழங்கினார். அதில் நம்ம பெரம்பூரும் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர். அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனிக்காக 1856இல் இங்கு ஒரு ரயில்வே வொர்க் ஷாப் கட்டப்பட்டது. இங்கு பணிபுரிவதற்காக இன்னும் நிறைய ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஒரு காலத்தில் பெரம்பூர் ஒரு குட்டி வெள்ளையர் நகரம் போலவே காட்சியளித்தது. இன்றும் பெரம்பூர் பகுதியில் நிறைய ஆங்கிலோ - இந்தியர்கள் காணப்படுவதற்கு இதுதான் காரணம்.

ஒரு கலா ரசிகனுக்கு பரிசாக கிடைத்து உருவானதாலோ என்னவோ, இப்போதும் பெரம்பூர் பல்வேறு மதத்தினரும், கலாச்சாரத்தினரும் ஒன்றுகலந்து வாழும் உயிர்துடிப்புமிக்க கலைப் படைப்பைப் போல் காட்சியளிக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* துய்ப்ளேக்ஸ் அரசாங்கத்தில் மற்றவர்களுக்கில்லாத உரிமைகளை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றிருந்தார். பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் காரியாலயத்திற்குச் செல்லவும் அவருக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது,

* சாதாரண வழக்குகளை ஆராய்ந்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் பிரெஞ்சுக்காரர்கள் அவருக்கு அளித்திருந்தனர்.

* ஆனந்தரங்கப் பிள்ளை 'ஆனந்தப் புரவி' என்ற பெயரில் புதுச்சேரி - கொழும்பு இடையே வியாபாரக் கப்பலை நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

No comments:

Post a Comment