என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, March 24, 2012

மெட்ராஸ் விமானம்

மெட்ராஸ் வான்வெளியில் முதன் முதலில் விமானம் பறந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த விமானம் பறந்தது மட்டுமல்ல, பிறந்ததும் மெட்ராசில்தான். எனவே இதை நாம் தாராளமாக மெட்ராஸ் விமானம் என்று அழைக்கலாம்.

1910ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் ஒரு வெயில் நாளில், தீவுத்திடல் மைதானத்தில் எதையோ பார்ப்பதற்காக ஏராளமானோர் கூடியிருந்தார்கள். ஓசியில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமல்ல அது. இரண்டு அணாக்களில் இருந்து 5 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்திருந்த கூட்டம். இரண்டு அணா கொடுத்தவர்கள் எல்லாம் தரையில் அமர்ந்திருக்க, ரூபாய்களில் கொடுத்தவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

மைதானத்தின் மத்தியில் இரண்டு இறக்கைகளுடன் ஒரு விசித்திரமான வாகனம் பார்வையாளர்களின் விழிகளை விரிய வைத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் அந்த வாகனத்தை சுற்றி சுற்றி வந்து எதை எதையோ சோதித்துக் கொண்டிருந்தார். பின்னர் அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆர்வத்தில் மூச்சுவிடக் கூட மறந்து, பார்த்துக் கொண்டிருந்தார்கள் மெட்ராஸ்வாசிகள்.

வாகனத்தின் முன்னால் இருந்த காற்றாடி சுற்ற ஆரம்பிக்க மெல்ல நகரத் தொடங்கியது அந்த விசித்திர வண்டி. மைதானத்தை ஒருமுறை அப்படியே சுற்றி வந்தது. இப்போது அனைவரும் அதை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுத்து வானில் உயரக் கிளம்பியது. மெட்ராஸ்வாசிகள் கண்களை கசக்கிக் கொண்டு நடப்பது நிஜம்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர்.

வானில் கிளம்பிய வாகனம் வங்கக் கடலின் மேல் பறந்து சிறிய புள்ளியாய் மாறி, பின்னர் காணாமல் போனது. எல்லோரும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுமார் அரைமணி நேரம் கழித்து அந்த உலோகப் பறவை திரும்பி வந்தது. மக்கள் அதற்கு ஆரவார வரவேற்பு கொடுத்தார்கள். விமானத்தில் இருந்து கைகளை அசைத்தபடி வெளியில் வந்த அந்த பிரெஞ்சுக்காரர், மக்களிடம் சென்று 'யாராவது வருகிறீர்களா, ஓசியில் ஒரு ரவுண்ட் அழைத்துச் செல்கிறேன்' என்றார். கூட்டத்தில் இப்போது பயங்கர நிசப்தம். யாரும் முன்வரத் தயாராக இல்லை.

சிறிது நேரம் கழித்து ஒரே ஒரு சிறுவன் மட்டும் எழுந்து நின்றான். அவனையும் அருகில் இருந்தவர்கள் இழுத்து உட்கார வைக்க முயற்சித்தனர். ஆனால் பிரெஞ்சுக்காரர் அந்த சிறுவனை அழைத்துச் சென்று விமானத்தில் தனக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டார். மீண்டும் பறக்கத் தயாரானது அந்த விசித்திர வாகனம். எல்லோரும் அதிசயிக்கும் வகையில், அதே சாகசம் மீண்டும் ஒருமுறை வான்வெளியில் வெற்றிகரமாக அரங்கேறியது.

அடுத்தநாள் மெட்ராஸ் நாளிதழ்கள் அனைத்திலும் இதுதான் முக்கியச் செய்தி. பாரதியார் நடத்திய இந்தியா வார இதழிலும் இதுபற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. அந்த கட்டுரையில், ஏழ்மை காரணமாக இந்தியர்கள் இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று பாரதி குறைபட்டிருந்தார். ஆனால் இந்த விமானத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதையும் பாரதி குறிப்பிடத் தவறவில்லை.

இந்த சாகசத்தை செய்து காட்டிய பிரெஞ்சுக்காரரின் பெயர் டி'ஏஞ்ஜிலி (D' ANGELI). இவர் மெட்ராசின் மவுண்ட் ரோட்டில் டி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் என்ற பெயரில் பெரிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். விமானம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றிய தகவல்களை பாரீஸ் நகரில் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் இவர் மெட்ராசிலேயே இந்த விமானத்தை தயாரித்தார்.

அப்போது மெட்ராசில் ரயில் பெட்டிகள் தயார் செய்துகொடுத்துக் கொண்டிருந்த பிரபல சிம்சன் நிறுவனத்திடம் விமான பாகங்களை தயாரிக்கும் பணியை ஒப்படைத்தார். இது மிகவும் சாதாரண சிறிய ரக விமானம் என்பதால் அதிக சிரமம் இல்லாமல் இங்கேயே தயாரித்துவிட முடிந்தது. பல்லாவரம் பகுதியில் இதனை முதலில் சோதித்துப் பார்த்தார். சோதனை வெற்றி அடைந்ததால், அதிக சக்தி உள்ள என்ஜினைப் பொருத்தி மீண்டும் சோதித்துப் பார்த்தார். இதுவும் வெற்றிகரமாக அமைந்துவிட, உடனே 'கூட்டுங்கடா கூட்டத்தை' என்று தீவுத்திடலில் டிக்கெட் போட்டுவிட்டார்.

ஆர்.ஏ. பத்மநாபன் என்ற மூத்த பத்திரிகையாளர் இந்தியன் ரிவ்யூவில் (INDIAN REVIEW) எழுதிய கட்டுரையில் இந்த சம்பவத்தை அப்படியே நமக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் மாநகரம். ஆனால் முறையாக ஆவணப்படுத்தத் தவறியதால் அவற்றில் பலவற்றை நாம் இழந்துவிட்டோம்.

நன்றி - தினத்தந்தி

* என்ஜின், பைலட் எல்லாம் சேர்த்து மெட்ராஸ் விமானத்தின் எடை வெறும் 700 பவுண்டுகள்தான்.

* விமானத்தில் உடன் பறந்த சிறுவனின் பெயர் பி.ஆர்.எஸ். வாசன். அந்த சிறுவனின் நேரடி அனுபவங்களும் அடுத்தநாள் செய்தித்தாள்களில் வந்திருந்தன.

* மெட்ராஸ் விமான சாகசத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் கல்கத்தாவில் ஒரு பஞ்சாபி தயாரித்த விமானம், 1909 டிசம்பர் 30ந் தேதி வானில் பறந்தது. அதுதான் இந்தியாவின் முதல் விமானம்.

1 comment: