என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, July 28, 2012

பின்னி மில்


ஒருகாலத்தில் மெட்ராஸ் மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது பின்னி மில். இன்று குடோனாகவும், படப்பிடிப்புத் தளமாகவும் விளங்கும் இந்த மில்லிற்கு கிட்டத்தட்ட 250 ஆண்டு வரலாறு இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் வணிகத்தை தொடங்கிய உடன் அவர்களோடு வியாபாரம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்களில் ஒருவர்தான் சார்லஸ் பின்னி.

உரிமம் ஏதும் இல்லாமல் 1769இல் மெட்ராஸ் வந்திறங்கினார் சார்லஸ் பின்னி. வாலாஜா நவாப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், மெல்ல மெட்ராஸ் மண்ணில் காலூன்ற முயற்சித்தார். இவரது குடும்பத்தினர் தொடர்ந்து நவாப்பிடம் பணியாற்றினர். அந்த வரிசையில் நவாப் சேவையைத் தொடர்வதற்காக சென்னை வந்தவர் ஜான் பின்னி. இவர்தான் பின்னாளில் பிரம்மாண்ட விருட்சமாய் வளர்ந்த பின்னி மில்லிற்கு வித்திட்டவர்.
ஜான் பின்னி

இன்று மவுண்ட் ரோடில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமையகம் இருக்கும் இடத்தில் இவர் ஒரு அலுவலகத்தை தொடங்கினார். மெட்ராஸ் வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வேலையில் இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. சிறிது காலம் கழித்து இந்த நிறுவனம் அருகிலேயே தற்போது தாஜ் கன்னிமரா ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு மாறியது. பின்னர் 1812இல் பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் சாலைக்கு சென்றுவிட்டாலும், 1820 வரை ஜான் பின்னி இங்கிருந்த வீட்டில்தான் வசித்து வந்தார். இதன் நினைவாக இன்றும் அந்த சாலை பின்னி ரோடு என்றே அழைக்கப்படுகிறது.

இதனிடையே 1800இல் ஜான் பின்னி, டெனிசன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். எனவே நிறுவனத்திற்கு பின்னி அண்ட் டெனிசன் எனப் பெயரிடப்பட்டது. துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் ஆர்மீனியன் தெருவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, 1814இல் இது பின்னி அண்ட் கோ என பெயர் மாற்றப்பட்டது. கப்பலில் இருந்து சரக்குகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக இந்த நிறுவனம் 30க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை வைத்திருந்தது. அதேபோல தரைக்கு வந்த சரக்குகளை கையாள்வதற்காக பேருந்து சேவையையும் வழங்கியது.

வியாபாரத்தை பெருக்க நினைத்த பின்னி, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையிலும் நுழைந்தார். இறுதியாக பின்னி கையில் எடுத்ததுதான், அவருக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த துணி வியாபாரம். பின்னி அண்ட் கோ நிறுவனம், வட சென்னையின் பெரம்பூர் பகுதியில் 1877இல் பக்கிங்ஹாம் மில்லை (இன்றைய பின்னி மில்) ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து 1882இல் கர்நாடிக் மில் தொடங்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய இந்த மில்கள் 1920இல் இணைப்பட்டன. இதன்மூலம் சுமார் 14,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக பின்னி விளங்கியது.
பின்னியின் ஆர்மீனியன் தெரு அலுவலகம்
பின்னியின் தயாரிப்புகள் உள்ளூர் மட்டுமின்றி உலக அளவில் விற்பனையில் பின்னி எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்புகள் தரமானதாக இருந்ததால், அடுத்த சில ஆண்டுகளிலேயே பின்னி அண்ட் கோ, துணி வியாபாரத்தில் முன்னோடி நிறுவனமாக மாறியது. இதனிடையே 1884இல் பெங்களூரில் பெங்களூர் காட்டன், சில்க் - உல்லன் மில்ஸை இந்நிறுவனம் தொடங்கியது. அந்த காலத்தில் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கம் பின்னி அண்ட் கோவின் தயாரிப்புகளைத் தான் அதிகளவில் கொள்முதல் செய்தது. பொதுமக்கள் மத்தியிலும் பின்னி துணிகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

இப்படி வியாபாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த பின்னிக்கு, இருபதாம் நூற்றாண்டு அத்தனை இனிமையானதாக இல்லை. மெட்ராசில் இயங்கி வந்த அர்புத்நாட் வங்கி (Arbuthnot Bank) 1906இல் திவாலானது பின்னிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பில் இருந்து மெல்ல மீள்வதற்குள் அடுத்த அடி 1947இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது விழுந்தது. சுதந்திரம் கொடுத்த கையோடு ஆங்கிலேயர்கள் கப்பல் ஏறி சென்றுவிட பின்னியின் வியாபாரம் தொய்வடைந்தது.

இதனிடையே பின்னி மில்கள் 1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்தன. பின்னர் சுமார் 200 ஆண்டுகளாக மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பின்னி மில், பல்வேறு காரணங்களால் 1996இல் தனது இயக்கத்தை ஒரேயடியாக நிறுத்திக் கொண்டது. இதில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 2001இல் இந்த மில்கள் விற்கப்பட்டுவிட்டன.

தொழிற்சங்கங்களின் வரலாற்றிலும் பின்னிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1915இல் ஜவுளி வியாபாரியான செல்வபதி செட்டியாரால் பின்னி மில்லில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம்தான், தென்னிந்தியாவின் முதல் தொழிற்சங்கம். அவரின் தூண்டுதலின் பேரில்தான் சென்னையில் முதன்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது. திரு வி.க தலைமையில் 1921இல் பின்னி மில்லில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

இப்படி உண்மையான தொழிலாளர் போராட்டங்களை பார்த்த பின்னி மில், இன்று படப்பிடிப்புகளுக்காக அரங்கேறும் சண்டைக் காட்சிகளை பார்த்தபடி சென்னை வரலாற்றின் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* மாதவரத்தில் இருக்கும் பின்னி காலனி, புளியந்தோப்பில் இருக்கும் பின்னி கார்டன்ஸ், போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பின்னி ரோடு ஆகியவை இன்றும் பின்னியை நினைவு கூர்கின்றன.

* திருவி.க., பி.பி. வாடியா போன்ற தலைவர்களின் போராட்டங்களின் விளைவாகத் தான் 12 மணி நேரமாக இருந்த வேலைநேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  

* பி அண்ட் சி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பின்னி உயர்நிலைப் பள்ளியில் அரை நாள் படிப்பு அரை நாள் தொழில் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

1 comment:

  1. (Binny - Buckingham & Carnatic Mills)-யின் சிறப்புக்களை தொகுத்து தந்தமைக்கு பாராட்டுக்கள்...

    15 வருடங்கள் அங்கு வேலை பார்த்தேன் என்கிற மகிழ்ச்சியுடன் படித்தேன்...

    மில்லைப் பற்றி இன்னும் நிறைய சிறப்புகள் உள்ளன. சென்னை வரலாற்றின் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறதை போல் நானும் மௌனமாகிறேன்...

    மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete