என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, October 27, 2012

மேப் போட்ட மெட்ராஸ்


மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் நிகழ்வுகள் சில நேரங்களில் அதிசயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து விடுகின்றன. எவரெஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம் என்ற கண்டுபிடிப்புக்கான விதை மெட்ராசில் விதைக்கப்பட்டதும் அப்படி ஒரு நிகழ்வுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இந்த தேசம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்தது. எனவே இதற்கு முறையான வரைபடங்கள் எதுவும் கிடையாது. இதனை மெல்ல தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இதன் நிலப்பரப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதினர். இந்த கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India). நிலத்தை முக்கோணங்களாக பிரித்து அளந்ததால், இந்த பெயர் கொடுக்கப்பட்டது.
கர்னல் லாம்ப்டன்
1802ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்த பெரும் பணி தொடங்கியது. இந்தியாவின் நீள அகலத்தையே அளக்கப் போகும் இந்த மெகா திட்டம் தொடங்கிய இடம் மெட்ராஸ். புனித ஜார்ஜ் கோட்டையை பரங்கி மலையுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை ஆரம்பமானது. ஆனால் சென்னையைப் பொறுத்தவரை இதற்கு முன்னரே சில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 1673-லேயே குத்துமதிப்பாக ஒரு வரைபடம் இருந்தது. இருந்தாலும் 1710இல் ஆளுநர் தாமஸ் பிட்டின் முயற்சியால் உருவான வரைபடமே நகரின் நம்பகமான முதல் வரைபடமாக கருதப்படுகிறது.

இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு தொடங்கிய போது, இந்த பணியை முடிக்க 5 ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்தனர். ஆனால் இந்த பணி 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. காரணம் இந்த பணியை அவ்வளவு துல்லியமாக மேற்கொண்டனர். ஒரு நிலத்தின் பரப்பை அளக்கும் போது, இயற்கை உட்பட எந்தெந்த காரணங்களால், எந்தெந்த அளவு தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப அளவீடு சீர் செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களும் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷப் பூச்சிகள் கடித்தும், மலேரியா போன்ற நோய்கள் தாக்கியும் பலர் உயிரிழந்தனர். இருப்பினும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த திட்டத்தின் மேற்பார்வையாளராக லாம்ப்டன் என்பவர் நியமிக்கப்பட்டதும் வேலை இன்னும் சூடு பிடித்தது. 'எத்தகைய சோதனை வந்தாலும் தொடர்ந்து முன்னே தான் செல்ல வேண்டும்' என்ற விதியை லாம்ப்டன் வகுத்தார். அதாவது மலை, ஆறு என எது குறுக்கிட்டாலும் அதில் ஏறி அல்லது நீந்தி முன்னே சென்று அளக்க வேண்டும். இதற்காக கோணங்களை அளக்க வசதியாக லாம்ப்டன் 'தியோடலைட் (Theodolite) என்ற புதிய கருவியுடன் களம் இறங்கினார்.
தியோடலைட்
இந்த கருவி இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. ஒருமுறை தஞ்சாவூரில் ஒரு கோவிலின் கோபுர உச்சிக்கு கொண்டு சென்றபோது, இந்த கருவி கீழே விழுந்து சேதமடைந்தது. பின்னர் இது சரி செய்யப்படும் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே 1818இல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவரும் லாம்ப்டனுக்கு சளைக்காமல் பணியில் பின்னி எடுத்தார்.

மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தபோது, ஓய்வில்லாமல் உழைத்து வந்த தாமஸ் லாம்டன், தனது 70வது வயதில் நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பிறகு, முழுப் பொறுப்பும் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர், இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டு வந்து, மிக துல்லியமான நில அளவைப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார்.

இப்படி அளந்துகொண்டே எவரெஸ்ட், இமயமலை வரை சென்று விட்டார். இமய மலையில் உள்ள சிகரங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் அளவிட்டார். ஆனாலும், அவற்றின் உயரத்தை அவரால் துல்லியமாக அறிய முடியவில்லை. இந்நிலையில் 1843-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார்.

அதன்பிறகு, ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தியோடலைட் கருவிகளை, இமயமலை மீது தூக்கிச் சென்று அதன் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான், கஞ்சன் ஜங்கா சிகரம் கண்டுபிடிக்கப்​பட்டது.

ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காள இளைஞர் இந்த பணியில் சேர்ந்தார். கணிதத் திறமையும் துடிப்பும் நிறைந்த அந்த இளைஞர் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினார். டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்து, முடிவில் 1852-ம் ஆண்டு, ராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அப்படி, அவர் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் இருந்தது. தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவாக ஆண்ட்ரு ஸ்காட் வாக், உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டினார்.
ஜியார்ஜ் எவரெஸ்ட்
ஆனால் இதை, எவரெஸ்ட்டே ஏற்க மறுத்தார். தனது பெயரை இந்தியர்களால் முறையாக உச்சரிக்க முடியாது என்பதே எவரெஸ்டின் எதிர்ப்புக்கு காரணம். ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் விடாப்பிடியாக உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார். இதை, ராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. இதுதான் மெட்ராசில் தொடங்கிய பணி எவரெஸ்ட் வரை நீண்ட கதை.

60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த பணியால் இந்திய நிலவியல் துறை பயனடைந்ததைப் போல, இதில் ஈடுபட்ட சர்வேயர்களும் பயனடைந்தனர். ஆன்ட்ரூ சாம்ரெட் (Andrew Chamrette), அவரைத் தொடர்ந்து அவரது மகன், பின்னர் அவரது மகன் என ஆன்ட்ரூ குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மகராஷ்டிர மாநிலத்தில் 1800 ஏக்கருக்கும் அதிகமாக வளைத்துப் போட்டனர். இதேபோல ஜார்ஜ் எவரெஸ்ட் அவர் பங்குக்கு டேராடூனில் 600 ஏக்கர் வாங்கிப் போட்டார். இப்படி இந்தியாவை அளந்தவர்கள் தனியாக தங்களுக்கென சில பல ஏக்கர்களை ஒதுக்கியது தனிக்கதை.

நன்றி - தினத்தந்தி

* நில அளவைக் குழு வைத்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று யாரோ சொன்னதை நம்பி, ஒரு வணிகன் அவற்றைப் பிடுங்கி சோதித்துப் பார்த்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

* பூமிக்கடியில் உள்ள புதையல்களைக் கண்டுபிடிக்க இந்த கருவி உதவும் என நினைத்து திருட்டுக் கும்பல் ஒன்று நில அளவைப் பணி​யாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்றவுடன் கருவிகளை உடைத்ததோடு, பணியாளர்களின் கை கால்களையும் முறித்திருக்கிறார்கள்.

2 comments:

  1. மிக நன்று..
    தொடரட்டும்.. சுகவாசியின்.. ரசனைகள்..
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. really good one brother.... mikka nandri, thodarattum umadhu vettri panigal

    ReplyDelete