என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, October 28, 2012

சென்னையின் சர்ச்சை சிலை


வரலாறு மிகவும் விசித்திரமானது. அது சிலரை உயர உயரத் தூக்கி கடைசியில் அதல பாதாளத்தில் வீசி எறியும். அப்படி வீசி எறியப்பட்ட ஒருவர் தான் கர்னல் ஜேம்ஸ் நீல். நகரின் பிரதான சாலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் சிலை அருங்காட்சியகத்தில் அடைபட்டுப் போன கதை மிகவும் சுவாரஸ்யமானது.

'அலகாபாத் கசாப்புக்காரன்' என்று பிற்காலத்தில் பெயர் எடுத்த ஜேம்ஸ் நீல், ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1810இல் பிறந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீல், கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவில் சேர்ந்தார். இரண்டாவது பர்மியப் போரில் சூறைக் காற்றாய் சுழன்றடித்த நீலுக்கு லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

கிழக்கிந்திய படையின் துடிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற நீல், 1857ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். தனது பெயர் இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது என்பதை நீல் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் இந்தியா வந்த சமயம் கிழக்கிந்திய படையில் இருந்த சில இந்திய வீரர்கள் தலைமைக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி இருந்தனர். விளைவு, இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வெள்ளையர் எதிர்ப்புகளிலேயே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாக கருதப்படும் சிப்பாய் கலகம் வெடித்தது.
சிப்பாய் கலகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் மாபெரும் கிளர்ச்சியான இந்த கலகம் கிழக்கிந்திய படையை கலக்கமடையச் செய்தது. வட மாநிலங்களில் வேகமாகப் பரவிய கலகத்தை ஒடுக்க திறமையான அதிகாரிகள் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு பனாரஸ் நகருக்கு அனுப்பப்பட்டவர்தான் நீல்.

ஜூன் 4ந் தேதி பனாரஸ் சென்றடைந்த நீலின் படை, ஒரே இரவில் ஏராளமான கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தது. பின்னர் அலகாபாத்திலும் நீல் இதே வெறியாட்டத்தை வெளிப்படுத்தி கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கினார். நீலின் இந்த படுபாதக செயல்தான் அவருக்கு 'அலகாபாத் கசாப்புக்காரன்' என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது.

இப்படிப்பட்ட நீலுக்குத் தான் கிழக்கிந்திய கம்பெனி மவுண்ட் ரோடில் சிலை வைத்து அழகு பார்த்தது. 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நீலனின் வெண்கலச் சிலையை ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எட்வர்டு மால்ட்பி திறந்து வைத்து, நீலனை வானளாவப் புகழ்ந்தார். இன்றைய ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் 10 அடி உயர பிரம்மாண்ட சிலை, தேச பக்தர்களை கொந்தளிக்கச் செய்தது. இதனை அகற்றக் கோரி ஆரம்பித்ததுதான் நீலன் சிலை சத்தியாகிரகம்.
மவுண்ட் ரோடில் இருந்த நீல் சிலை
இந்த அறவழிப் போராட்டம் 1927இல் நடத்தப்பட்டது. சென்னை மகாஜன சபையும்இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்றக் கோரி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த சோமையாஜூலு இதற்கு தலைமை வகித்தார். சென்னை மாகாணம் முழுவதிலும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன.

சோமையாஜுலு, சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின், செப்டம்பர் 1927இல் காமராஜர் களத்தில் இறங்கினார். அந்த சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியை சந்தித்து இதற்கான அனுமதியையும் பெற்றார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் நீலை அங்கிருந்து அசைக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதால், இது உரிய கவனம் பெறாமல் போய்விட்டது. நீல் பல ஆண்டுகள் மவுண்ட் சாலையில் மவுனமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து நீலை இடம்மாற்றி ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைத்தனர்.

பின்னர் 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வரானதும் முதல் வேலையாக நீல் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நீல் சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் 1952ஆம் ஆண்டுதான் நீலின் சிலை முறைப்படி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு வீரனின் சிலை என்று ஆங்கிலேயர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒன்று, இந்தியர்களால் அவமானச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. விளைவு, காலம் அந்த காலனை தற்போது அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் நிற்க வைத்திருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* லக்னோ நகரில் குதிரை மீது அமர்ந்தபடி களத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல், இந்தியச் சிப்பாய்களின் பீரங்கித் தாக்குதலுக்கு இரையாகி செத்து விழுந்தார்.

* நீலின் சிலையை லண்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி எம் நோபிள் வடித்துக் கொடுத்தார்.

No comments:

Post a Comment