என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, February 17, 2013

பழவேற்காடு கோட்டை


ஒருகாலத்தில் மிகப் பெரிய விஷயமாக இருந்தவை கூட, காலப்போக்கில் மெல்ல மறைந்து, இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும்.அப்படி காலக்கரையானால் அரிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கிறது பழவேற்காடு கோட்டையின் சில கடைசி கற்கள்.
கோட்டையின் வரைபடம்

பிரிட்டீஷார் மெட்ராசில் கால்பதித்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதில் இருந்துதான் சென்னையின் கதை தொடங்குகிறது. ஆனால் அவர்களின் வருகைக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல பிரிட்டீஷாருக்கு முன்பே இங்கு வந்து குடியேறிய வெளிநாட்டினரும் இருக்கிறார்கள். பல விஷயங்களில் அவர்களின் வழியைத்தான் பிற்காலத்தில் பிரிட்டீஷார் அப்படியே பின்பற்றினர்.

1498இல் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்து கோழிக்கோட்டை அடைந்ததில் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. இந்தியாவிற்கு வரும் வழி தெரிந்ததையடுத்து 1522இல் போர்த்துகீசியர்கள் பழவேற்காட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் பழவேற்காடு மிகப் பிரபலமான துறைமுக நகராக விளங்கியது. இங்கிருந்து துணிகள், வாசனைப் பொருட்கள் போன்றவை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்படி செல்வச் செழிப்போடு இருந்ததே போர்த்துகீசியர்கள் இங்கு வந்ததற்குக் காரணம்.

அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்கள் வந்தனர்.  அப்போது இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னர் இரண்டாம் வேங்கடரின் மனைவி இறைவியிடம் அனுமதி பெற்று அவர்கள் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினர். இது ஏற்கனவே இங்கு தொழில் செய்துவரும் போர்த்துகீசியர்களை எரிச்சல்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், டச்சுக்காரர்களின் தொழிற்சாலையைத் தாக்கினர். அப்போதுதான் ஒரு கோட்டையின் அவசியம் டச்சுக்காரர்களுக்குப் புரிந்தது.

இதன் விளைவாக 1613இல் உருவானதுதான் ஜெல்டிரியா கோட்டை (FORT GELDRIA). இந்த ஜெல்டிரியா கோட்டையைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை (1639) கட்டினர். ஜெல்டிரியா என்பது நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர். இந்த கோட்டையின் முதல் டைரக்டர் ஜெனரலான வெம்மர் (Wemmer van Berchem) தனது சொந்த ஊரின் பெயரையே கோட்டைக்கு வைத்துவிட்டார். கட்டி முடிக்கப்பட்ட முதல் மாதத்திலேயே கோட்டை ஒரு தாக்குதலை எதிர்கொண்டது. உள்ளூர் தலைவரான எத்திராஜா என்பவர் சிறுபடையைக் கொண்டு கோட்டையைத் தாக்கினார். ஆனால் டச்சுக்காரர்கள் இதனை முறியடித்துவிட்டனர். அடுத்ததாக தொழில் போட்டியாளர்களான போர்த்துகீசியர்கள் தரை மற்றும் கடல்வழியாக இருமுனைத்தாக்குதல் நடத்தினர். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் அளவுக்கு கோட்டை மிகப் பலமாக கட்டப்பட்டிருந்தது. 90 வீரர்கள் எந்நேரமும் கோட்டையைக் காவல் காத்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.

கோட்டையைச் சுற்றி நான்குபுறமும் ஆழமான அகழிகள், மதில் சுவற்றில் அனைத்து பக்கங்களிலும் பீரங்கிகள் என பல அடுக்கு பாதுகாப்புடன் விளங்கியது ஜெல்டிரியா கோட்டை. இந்தியாவில் டச்சுக்காரர்களுக்கு இருந்த ஒரே கோட்டை என்பதால் இதனைப் போற்றிப் பாதுகாத்தனர். கடலைப் பார்த்தபடி இருக்கும் கோட்டையின் தென்கிழக்கு வாசலில் மிகப்பெரிய கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது. கப்பல்கள் தூரத்தில் இருந்தே அடையாளம் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

கோட்டைக்குள் ஒரு பெரிய வெடிமருந்துத் தொழிற்சாலை இருந்தது. கிழக்கு கடற்கரையோரம் இருந்த டச்சு குடியேற்றப் பகுதிகள் முழுவதற்கும் இங்கிருந்துதான் வெடிமருந்து சப்ளை செய்யப்பட்டது. உள்ளேயே ஒரு நாணய வார்ப்புசாலையும் செயல்பட்டிருக்கிறது. மிக அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்து இருந்ததால், இந்த நாணயச் சாலை அவசியமானதாக இருந்தது. இங்கு தயாரான நாணயங்கள் பழவேற்காடு நாணயங்கள் என அறியப்பட்டன.
பழவேற்காடு நாணயங்கள்

கோட்டைக்குள்ளே வசிக்கும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளேயே பல கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த கோட்டை குறித்த வரைபடம் ஒன்றில் கோட்டைக்குள் மூன்று கிணறுகள் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சகல வசதிகளுடன் இருந்த ஜெல்டிரியா கோட்டையை, மைசூர் போரின்போது ஹைதர் அலி அழித்தார். 1806இல் ஹாலந்து, பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்ததும், பிரிட்டீஷார் இந்தக் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.

இன்று கோட்டை இருந்த இடத்தில் ஒரு பெரிய முட்புதர் காடுதான் எஞ்சியிருக்கிறது. சிரமப்பட்டு உள்ளே சென்று பார்த்தால், ஒருகாலத்தில் கோட்டை மதிலில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்த சில கற்கள் சாயம் போன கனவுகளாய் காலில் மிதிபடுகின்றன. அந்த முட்புதர் காடு முழுவதும் 16ஆம் நூற்றாண்டு டச்சுக்காரர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாய் அலைந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* 1522இல் கிருஷ்ணதேவ ராயர்தான் பழவேற்காடு என்று பெயர் வைத்தார். அதற்கு முன் இந்த பகுதி, புலியூர் கோட்டம், பையர் கோட்டம், அனந்தராயன் பட்டினம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது.

* கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் டச்சுக்காரர்களின் கல்லறை ஒன்று இருக்கிறது. இங்கிருக்கும் சமாதிக் கற்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment