என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, May 4, 2013

மெட்ராஸ் பரதேசிகள்


மெட்ராஸ் மண்ணில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரதேசியாய், அடிமையாய் கப்பல்களில் கொத்து கொத்தாக அடைத்து அனுப்பப்பட்ட எளிய மனிதர்களின் கதை நம்மில் பலரும் அறியாதது. மெட்ராஸ் மாநகரின் வரலாறு அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பிருந்தே அடிமை முறை இருந்திருக்கிறது. ஆனால் வேலைக்காக அடிமையை வாங்குவது, கொத்தடிமையாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது போன்ற பழக்கமெல்லாம் ஐரோப்பியர்கள் வந்த பிறகுதான் தொடங்கியது. ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அனைவரும் இந்த அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆரம்ப நாட்களில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஆப்ரிக்க நாடுகளில் அடிமைகளை வாங்கி கீழை நாடுகளில் தோட்ட வேலைக்காக அனுப்பி வைத்தனர். அந்நாட்களில் ஆப்ரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து கப்பல்களிலும் வணிகப் பொருட்களோடு சேர்த்து அடிமைகளும் ஏற்றப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறியதும், ஆப்ரிக்காவில் செய்த வேலையை இங்கும் செய்யத் தொடங்கினர்.

ஜனவரி 5, 1641இல் மைக்கேல் என்ற கப்பலில் 14 மலபார் (தமிழ்) நாட்டு மனிதர்களை அடிமைகளாக அழைத்துச் சென்றதாக ஒரு குறிப்பு சொல்கிறது. இதுபோன்று அடிமைகளாக செல்பவர்களின் கூலி, அவர்கள் செல்லும் நாட்டில் உள்ள உள்நாட்டுத் தொழிலாளர்களின் கூலியை விட மூன்று மடங்கு குறைவானதாக இருந்தது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

இந்தியாவின் தென்பகுதியில் மெட்ராஸ் துறைமுகத்தில்தான் அடிமை வணிகம் அமோகமாக நடைபெற்றது. மெட்ராஸில் அடிமை வணிகத்திற்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டதே இதற்குக் காரணம். அடிமைகளுக்கான சுங்க வரி மற்ற துறைமுகங்களை விட மெட்ராசில் குறைவு. 1711ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு அடிமைக்கு 6 ஷில்லிங்கு, 9 பென்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 8 அணா, சுங்க வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் கிழக்கிந்திய கம்பெனி, நீதிபதி மற்றும் வேலையாட்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த குறைவான சுங்க வரி காரணமாக ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி டச்சுக்காரர்கள் கூட மெட்ராஸ் துறைமுகம் வழியாகவே தங்களின் அடிமை வியாபாரத்தை நடத்தினர். அடிமைகளைப் பிடிப்பதற்காக அவர்கள் மெட்ராஸில் தனியாக புரோக்கர்களை வைத்திருந்தனர். அதெல்லாம் சரி, இவர்களிடம் அடிமைகளாக, முன்பின் தெரியாத நாட்டிற்கு செல்ல உள்நாட்டு மக்கள் எப்படி சம்மதித்தார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.

மெட்ராசில் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள் தான் இதற்கு பதில். 1646இல் ஒரு பயங்கரப் பஞ்சம் மெட்ராஸை பந்தாடியது. சொந்த மண்ணில் சோற்றுக்கு இல்லாமல் சாவதைவிட, எங்கோ சென்று அடிமையாக உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே மேல் என மக்கள் முடிவுக்கு வந்தனர். அப்படி பஞ்சத்தால் நொந்துபோன மக்களை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அனுப்பி வைத்து காசு பார்த்தனர்.

பஞ்சம் போன பிறகும் மெட்ராசில் அடிமை வியாபாரம் தொடர்ந்தது. அடிமைகள் கிடைக்காதபோது, குழந்தைகளையும், பெண்களையும் திருடி விற்கும் அயோக்கியத்தனங்கள் அரங்கேறின. மெட்ராசில் தங்கியிருந்த வெனிஸ் நகரத்து வியாபாரியான நிகோலஸ் மானுச்சி தமது நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். 'ஒரு இத்தாலிய கிறிஸ்துவ மத போதகர், தரங்கம்பாடியில், மதுரை வாழ் இந்தியக் கிறிஸ்துவரை ஏமாற்றி அவரது மனைவியையும், நான்கு மகன்களையும் 30 பகோடாக்களுக்கு விற்றுவிட்டார்' என்று அவர் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அடிமை வியாபாரத்திற்கு ஆங்கிலேயர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியபோதும், இதன் மூலம் நிறைய பணம் கிடைத்ததால், கிழக்கிந்திய கம்பெனி இதனை கண்டும்காணாமல் இருந்தது. அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதாக யாராவது பிடிபட்டால் பெயரளவில் ஒரு சிறிய தண்டனையை கொடுத்து பிரச்னையை அதோடு முடிக்கப் பார்த்தது.

1682இல் தான் அடிமை வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கம்பெனி உண்மையிலேயே யோசிக்க ஆரம்பித்தது. இதற்காக ஆங்கிலம், போர்ச்சுகீஸ், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி இனிமேல் யாரேனும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டால் 50 பகோடாக்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படி வசூலிக்கப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, இதுகுறித்து துப்பு கொடுத்தவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஐந்தாவது ஆண்டு (1687இல்) மெட்ராசில் மீண்டும் பஞ்சம் வந்தது. கம்பெனியின் தடையையும் மீறி மீண்டும் அடிமை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட கம்பெனி, ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு அடிமைக்கும் ஒரு பகோடா சுங்கம் வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது.
கப்பலில் செல்லும் அடிமைகள்

பஞ்சத்தின் கொடுமை சற்று தீர்ந்ததும், 1688இல் அடிமை வணிகத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அடிமைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருந்தவர்கள் கடுப்பு காட்டியதால், அடிமைத் தடுப்புச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டது. அடிமைகளை ஏற்றுமதி செய்யும்முன் நீதிபதியிடம் உத்தரவு பெற வேண்டும், தவறான முறையில் அடிமைகளை கொண்டு வரவில்லை என்றும், அவர்களுக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றும் தெரிந்த பிறகுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அடிமை வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. காரணம், இதில் புழங்கிய அபரிமிதமான காசு.

பின்னர் மக்கள் மத்தியில் கம்பெனிக்கு இதனால் கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் அடிமை வியாபாரத்தை ஒரேயடியாக ஒழிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அடிமை வியாபாரத்திற்கு முதலில் முடிவு கட்டிய பெருமையும் மெட்ராஸையே சாரும். மெட்ராஸ் துறைமுகத்தில் அடிமை வியாபாரம் அடியோடு தடை செய்யப்பட்ட பிறகும், இந்தியாவில் இருந்த டச்சு, ஃபிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியத் துறைமுகங்களில் இந்த வணிகம் தொடர்ந்தது.

நன்றி - தினத்தந்தி

* அடிமைகளாக சென்ற தமிழர்கள்தான் சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளில் நெல் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.

* டெய்லர் என்பவர் நீதிபதியாக இருந்தபோது, கப்பலில் கடத்தப்பட இருந்த 20 பையன்களையும், 21 பெண் குழந்தைகளையும் மீட்டார். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இரண்டரை ஆண்டுகள் பராமரிக்கப்பட்டனர்.

1 comment:

  1. 1xBet Korean online gambling dengan menyediakan - Legalbet.co.kr
    1xBet Korean online gambling dengan menyediakan terbaik seperti konstanti permainan casino 1xbet korean dengan 메리트 카지노 주소 slot gacor hari dengan deccasino bonus dengan bola sbobet.

    ReplyDelete