என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, May 25, 2013

சென்னைப் பல்கலைக்கழகம்


மெட்ராசில் உயர்கல்வி பற்றி 19ஆம் நூற்றாண்டில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பிறந்ததுதான், 150 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்.

ஆங்கிலேயர்கள், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என இந்தியாவின் மூன்று துறைமுக நகரங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த மூன்று நகரங்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இந்நகரங்களில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும் என எண்ணினர். இதுபற்றிய விவாதங்களும் அடிக்கடி நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, 1854ம் ஆண்டு சார்லஸ் உட் என்பவர் கல்வி தொடர்பாக அரசுக்கு ஒரு குறிப்பு எழுதினார். அதன் பயனாக, 1855ம் ஆண்டு மதராஸ் அரசு ஒரு தனியார் கல்வித்துறையை உருவாக்கியது.
பட்டம் வென்ற மாணவர்கள்

அப்போது இந்தியாவில் இருந்த கல்விச்சூழல் கிழக்கிந்திய கம்பெனியை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. திறமையான கிளார்க்குகளை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு ஒரு கல்விமுறை தேவைப்பட்டது. இந்தியர்கள் தாங்கள் சொல்வதை புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே இந்த கல்வியின் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, அதற்கு உயர்கல்வி என்று பெயரிட்டார்கள்.

அதற்கு முன்பு வரை, இந்தியாவில் வீட்டிலேயே கற்றுக் கொள்ளும் திண்ணைக்கல்வி, குருகுலத்திற்கு சென்று குருவிற்கு பணிவிடை செய்து கற்றுக் கொள்ளும் குருகுலக்கல்வி, இதையும் விட்டால் சான்றிதழ் கல்வி ஆகியவைதான் நடைமுறையில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்தவுடன் தங்களுக்கான வேலையாட்களை தயார் செய்ய உயர்கல்வி(!) முறையை அறிமுகம் செய்தனர்.

இந்த கல்விக்கான பாடத்திட்டங்களை மெக்காலே என்பவர் தயாரித்தார். இவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி பள்ளிகளில் பாடங்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஐரோப்பிய இலக்கியம், அடிப்படை அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. குறிப்பாக இந்த பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால்தான், இந்தியர்களால் அன்றைக்கு ஆங்கில அரசில் வேலை செய்ய முடிந்தது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்ற சட்டமும் அந்த காலகட்டத்தில்தான் (1837 ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்டது.

இந்த ஆங்கிலக் கல்வி கூடங்களில் படித்த இந்தியர்களின் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியது. இந்தியர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக படிப்பதைப் பார்த்து வியந்து போன கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்க முன்வந்தது. இதற்கான ஆணையை 1849ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு பிறப்பித்தார். இந்தியர்களில் சிலர் இப்படி உயர் பதவி பெற்று வளமாக வாழ்வதைக் கண்ட மற்றவர்களுக்கும் தாங்களும் அதுபோல் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆங்கில கல்வி உயர்ந்தது என்ற மனநிலை வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
செனட் இல்லம்

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், 1854ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் தேதி, அப்போதைய இந்திய கல்வி கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சார்லஸ் உட், அந்த கல்விக் குறிப்பை எழுதினார். அதற்கு முன்னரே, மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு உயர்கல்வி நிறுவனம் தேவை என வலியுறுத்தி 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஒரு மனு, அப்போதைய ஆளுநர் லார்ட் எல்பின்ஸ்டோனிடம் 1839இல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அப்போதைய அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்டனை தலைவராகக் கொண்டு, 1840ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக போர்டு ஒன்று அமைக்கப்பட்டது.

இதனிடையே 1857ஆம் ஆண்டில் மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பது மிகுந்த கவுரமான விஷயமாக பார்க்கப்பட்டது. 1858ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 1956ஆம் ஆண்டு சென்னை தனி மாநிலமாக உருவாகும் வரை தென்னிந்தியா முழுவதிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி அதிகாரம் பரவியிருந்தது.

பின்னாட்களில் பல்கலைக்கழகம் பல்கிப் பெருகியதும், இதிலிருந்து மைசூர் பல்கலை(1916), உசுமானியா பல்கலை(1918), ஆந்திர பல்கலை(1926), அண்ணாமலை பல்கலை(1929) என பல பல்கலைக்கழகங்கள், சேய் பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.

பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க செனட் இல்லம் (Senate House ) எனப்படும் ஆட்சிப் பேரவை மன்றக் கட்டடம் இந்தியாவின் சிறந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெட்ராஸ் அரசாங்கம் இந்த கட்டடத்தை கட்டுவதற்கு முன், இதனை சிறப்பாக வடிவமைக்க விரும்பி 1864இல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் தங்களின் கட்டட வரைபடங்களை அனுப்பி வைக்க, இறுதியில் இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம் (அருகில் உள்ள மாநிலக் கல்லூரியும் இவர் கட்டியதுதான்) என்ற பொறியாளரின் வரைபடம் தான் தேர்வு செய்யப்பட்டது.

இந்த கட்டடத்திற்கான பணிகள் 1874ஆம் ஆண்டு தொடங்கி 1879ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்துபோன செனட் இல்லம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள், சர்வதேச மாநாடுகள், இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வரவேற்பு, மிகச்சிறந்த இசைக் கச்சேரிகள் என பல நிகழ்ச்சிகளை இந்த கட்டடம் பார்த்திருக்கிறது.

இந்தியாவின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அரும்பெரும் தொண்டாற்றி வருகிறது. அரசியல் மேதைகள், திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் என பலதரப்பட்ட பெருமக்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் இதுவரை ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியரை உலகிற்கு அளித்திருக்கிறது. மொத்தத்தில், எதிர்புறம் உள்ள வங்கக் கடலுக்கு போட்டியாக இந்த கல்விக் கடலும் 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இளமை மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக் கூட்டம் செனட் இல்லத்தில்தான் நடைபெற்றது.

* 1957ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் 128 கல்லூரிகள் இணைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment